Sunday, March 10, 2013

விடுமுறைக்கு விடுமுறை - சிறுகதைத் தொகுதி

விடுமுறைக்கு விடுமுறை சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக்குறிப்பு


ஓரிரண்டு கவிதைகளை எழுதி அவை பத்திரிகையில் வெளிவந்தாலேயே தமக்குத்தாமே கவிஞர் பட்டம் சூட்டிக்கொண்டு திரியும் பலபேர் நம் மத்தியில் இருக்க, விடுமுறைக்கு விடுமுறை என்ற காத்திரமான சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டும் கூட எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இருக்கின்றார் திருமதி பவானி தேவதாஸ் அவர்கள்.

தலாத்து ஓயா தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணிபுரியும் இவரது கன்னித் தொகுதியான விடுமுறைக்கு விடுமுறை என்ற இச்சிறுகதைத் தொகுதி 11 கதைகளை உள்ளடக்கி 66 பக்கங்களில் புரவலர் புத்தகப் பூங்காவின் மூலம் வெளிவந்திருக்கிறது.

தற்கால வேலைப்பளுவுக்கு மத்தியில் சிறுகதைகளை வாசகர்கள் வாசிப்பது மிகக்குறைவு. ஆனாலும் பவானி தேவதாஸின் கதைகளை மேலோட்டமாக கண்டுவிட்டாலே அதை முழுவதுமாக வாசித்துவிட வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. எழுதப்பட்ட கதைகளில் அநேகமானவை உண்மைச் சம்பவங்களாக இருப்பதால் அவை மேலும் சிறப்படைகின்றன.



நினைவில் நீங்காதவள் என்ற சிறுகதை 1983 இல் இனக்கலவரம் நடந்தபோது தமிழருக்காக தற்கொலை செய்துகொண்ட நீத்தா என்ற சிங்கள யுவதியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத் தமிழ்க் குடும்பம் ஒன்றில் வீட்டுவேலை செய்கிறாள் நீத்தா. குறிப்பிட்ட தினமன்று அந்த வீட்டிற்கு சிலர் கல்லெறிந்து கலாட்டா பண்ணியிருக்கிறார்கள். தமிழர் வீட்டில் உனக்கென்ன வேலை என்று கேட்டவர்கள் மறுபடி வரும்போது அவளை அங்கிருந்து போகுமாறு சொல்லிவிட்டு போகிறார்கள்.

எனினும் வீட்டார்கள் அவளை நம்பி விட்டுப்போனதால் அந்தத் தமிழர்களின் உடமைகளை பாதுகாப்பதை தனது கடமையாகவே கருதுகிறாள் நீத்தா. மறுதினம் வன்முறையாளர்கள் வந்து தமிழர்கள் வாழ்ந்த அவ்வீட்டை எரிக்க அத்துக்கம் தாளாமல் அழுதபடியே தாயுடன் வருகிறாள் நீத்தா. யாரும் எதிர்பாராத விதமாக அப்போது வந்த புகைவண்டிக்கு குறுக்காக பாய்ந்து தனது துக்கத்தை வெளிப்படுத்திய நீத்தாவே இக்கதையில் நாயகி.

என் இனிய தோழனே என்ற கதை சிறுவயதிலிருந்து சகோதரனாகவே பழகி வந்த சிங்கள நண்பனின் மரணம் பற்றியது. பஸ்ஸில் மற்ற இளைஞர்கள் கிண்டல் பண்ணும்போது தனது தங்கை என்று கூறி அவர்களுடன் சண்டையிடுகிறான் சூட்டிக்கா என்ற அந்த நண்பன். இறுதியில் இராணுவத்தில் இணைந்து யுத்தத்துக்கு இலக்காகி இறந்துவிடுகிறான். இந்தக் கதையை வாசிக்கும்போது மனம் வலியால் துடிக்கின்றது.

சமவெளி - சிகரம் என்ற சிறுகதை இணைபிரியாது பழகி இறுதியில் சுனாமிக்கு பலியான நண்பிகளின் கதையை துல்லியாக கூறி நிற்கிறது. மலைநாட்டைச் சேர்ந்த நந்தினி, மட்டக்களப்பைச் சேர்ந்த மாயா. இருவரும் பிரதான பாத்திரங்கள். படிப்பதற்காக மட்டக்களப்புக்குச் சென்ற நந்தினியுடன் ஐக்கியமாகும் மாயா. உயர்த பரீட்சையின் பின்னர் நந்தினி ஊருக்கு புறப்படுகின்றாள். கிறிஸ்மஸ் தினத்துக்கு மறுநாள் அவளது மனதில் இனம்புரியாத தவிப்பு.. இறுதியில் சுனாமி அரக்கன் மாயாவை கொன்றுவிடுகின்றான். மெய்சிலிர்க்க வைக்கும் கதை. அதற்காக திருமதி பவானி அவர்கள் கையாண்டிருக்கும் அழகான கதையோட்டத்தால் சம்பவம் கண்முன் நிழலாடுகிறது. நெஞ்சம் விம்மித் தணிகின்றது.

பிறந்தகத்தில் பிறந்த நாள் என்ற கதை பலருக்கும் ஏற்பட்ட அனுபவங்களாகவும் இருக்கலாம். திருமணமாகி வேறிடம் போகும் பெண்கள் தமது பிறந்த வீட்டுக்கு கணவர் பிள்ளைகளுடன் வரும்போது எதிர்கொள்ளும் சிக்கல்களை இக்கதை சொல்லி நிற்கிறது. அதுவும் சகோதரர்களின் அலட்சியப்போக்கும், அவர்களின் மனைவிமாரின் சிடுசிடுப்பும் ஏன் வந்துதொலைத்தோம் என்ற மனப்பாங்கை தோற்றுவிக்கும். அதை நிதர்சனபூர்வமாக வெளிப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர்.

ஏன் என்ற கதை நோயால் அவதியுற்று இறந்துபோன மகன், மகள், மனைவி பற்றியது. மிகவும் சோகத்துக்குரிய நிகழ்வுகளை உள்ளடக்கியதாக இக்கதை காணப்படுகின்றது. தன்னை விட்டுப் பிரிந்துபோன தனது குடும்பத்தினரை எண்ணி கணவன் படும் அவஸ்தை வாசகருக்கும் தொற்றிவிடுகின்றது.

இவ்வாறு கற்பனைகளுக்கு உயிரிகொடுத்து அவற்றை எல்லாம் கதைகளாக்கும் முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு பெரும்பாலான தனது அனுபவங்களை கருக்களாக்கி அதை சிறுகதைகளாய் பிரசவித்திருக்கிறார் திருமதி. பவானி தேவதாஸ் அவர்கள். அவரது இலக்கிய முயற்சி இன்னும் சிறப்புற வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - விடுமுறைக்கு விடுமுறை (சிறுகதை)
நூலாசிரியர் - பவானி தேவதாஸ்
வெளியீடு - புரவலர் புத்தகப் பூங்கா
விலை - 150 ரூபாய்

No comments:

Post a Comment