Friday, August 10, 2012

பாவைப் பிள்ளை - சிறுவர் பாடல் தொகுதி

பாவைப் பிள்ளை சிறுவர் பாடல் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

சிறுவர் படைப்பிலக்கியத்தில் ஆழமாக தனது ஆற்றலை வெளிப்படுத்தி வருபவர்களுள் திருகோணமலை செ. ஞானராசா அவர்களும் முக்கியமானவர். தனது மூன்றாவது சிறுவர் நூலாக பாவைப் பிள்ளை என்ற தொகுதியை வெளயிட்டிருக்கின்றார்.

சிறுவர் பா அமுதம் இவரது முதல் தொhகுதியும், புதிய பாதை என்பது இவரது இரண்டாவது தொகுதியுமாகும்.

அதிபராக கல்விப் பணியாற்றி வருவதுடன் கவிதை, சிறுகதை, கட்டுரை போன்ற துறைகளிலும் தனது ஆளுமையை வெளிப்படுத்தி வரும் செ. ஞானராசா அவர்கள் இலங்கை தேசிய நூலக அபிவிருத்தி சபையால் இப்புத்தகத்துக்குரிய சான்றிதழையும் பெறிருக்கின்றார்.

மொத்தம் 20 பாடல்களை உள்ளடக்கி வெளிவந்திருக்கும் இந்நூலானது  47 பக்கங்களில், வர்ணப் படங்களுடன் சர்வீனா வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.

இவ்விரண்டு வரிகளில் வாழ்க்கையின் அத்தனைப் பகுதிகளையும் தெட்டத் தெளிவாக கூறியிருப்பது திருக்குறள் என்று பலரும் சொல்வர். திருக்குறள் இன்று பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அத்தகைய மேன்மை பொருந்திய நூல் பற்றி சிறுவர்களும் உணர வேண்டும் என்பதற்காய் திருக்குறள் என்ற முதல் பாடலின் சில வரிகள் இவ்வாறு வருகிறது.

இரண்டு வரியில் உள்ளதாம்.
இனிய கருத்து நிறைந்ததாம்
திரண்ட செய்தி சொல்லுமாம்
திருவள்ளுவர் தந்ததாம்

செய்ய எதை வேண்டுமோ
செய்ய எதை வேண்டாமோ
மெய் உணர்த்தி வைக்குமாம்
மேன்மையான குறளதாம்

வேளைப்பளு அதிகரித்திருக்கும் இன்றைய காலத்தில் தந்தை மாத்திரமன்றி தாயும் தொழிலுக்குச் செல்லும் தேவை அல்லது திண்டாட்டம் வலுப்பெற்றிருக்கிறது. அவ்வாறாயின் அலுவலகத்துக்கு செல்லும் அவதியில் அவசர உணவுகள் தான் இன்று கைகொடுக்கின்றன.

பிட்டு, இடியப்பம், தோசை போன்ற பாரம்பரிய உணவுகள் மறக்கப்பட்டு பாஸ்ட்புட் உணவுகள் எம்மை ஆக்கிரமித்துவிட்டன. நல்லது என்ற தலைப்பிடப்பட்ட பாடல் சத்துணவுகளை இன்னொருமுறை ஞாபகப்படுத்துமாற்போல் இருப்பதை அவதானிக்கலாம்.

பாலும் பழமும் நல்லது
பச்சைக் காய்கறி நல்லது

பருப்பும் கிழங்கும் நல்லது
பலம் தருவதில் வல்லது

மீனும் முட்டை இறைச்சியும்
மிகவும் ஊட்டம் உள்ளது

சிறுவர்களை மாத்திரமல்லாது கவிஞர்களையும் கவர்ந்த ஒரு அதிசயம் நிலா. நிலாவைப் பற்றி எப்படியெல்லாமோ, யார் யாரெல்லாமோ கூறி விட்டார்கள். ஆனாலும் படைப்பாளிகள் ஒவ்வொருவரும் தமது ரசனைக்கேற்றாற்போல நிலவினைப் பற்றி பாடிக்கொண்டு தான் இருக்கின்றார்கள். நூலாசிரியரும் பாடுகிறார் இவ்வாறு..

நிலாப்பாட்டு பாடியே
நிலாவோடு சேருவோம்
உலாப் போகும் வெளியினை
உல்லாசமாய் நாடுவோம்

இரவைத் தேடும் உறவுப்பூ
இருளில் அழகு காட்டுதே
வரவுக்காக காப்பதால்
வழியில் மகிழ்ச்சி பூக்குதே

இலங்கை நாடு எம் நாடு என்று வெறுமனே பாடிக் கொண்டிருக்காமல் மூவின மக்களும் சமமானவர்கள், தாய் நாட்டை நாம் பாதுகாக்க வேண்டும் என்ற கோட்பாட்டை மாணவர்கள் மத்தியில், எதிர்கால சந்ததியினர் மத்தியில் உருவாக்க வேண்டும். அப்போதுதான் நாட்டில் அமைதியும், சுபீட்சமும் தோன்ற வழி பிறக்கும். கடந்த காலங்கள் போன்று எதிர்காலங்கள் ஆகிவிடக்கூடாது. ஒற்றுமையை வலியுறுத்தும்  முயற்சியாக எங்கள் நாடு என்று தலைப்பிட்ட கவிதையின் சில வரிகள் இதோ..

இந்து இஸ்லாம் பௌத்தம்
இனிய கிறிஸ்தவமும்
இந்த நாட்டின் நெறியாய்
இருக்கும் ஒரே விதமாய்

இனங்கள் பல உண்டு
இலங்கையர் நாம் என்று
சனங்கள் உணர்ந்து கொண்டால்
சரிசமமாய் வாழ்வோம்

நலன்புரி நிலையங்களில் வாழ்க்கை நடாத்துபவர்கள் அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் வாழுவதை அறிந்திருக்கிறோம். அவர்களுக்கு எம்மாலான உதிவிகளைச் செய்ய வேண்டும். சொந்த மண்ணில் இருக்கும்போது மகிழ்ச்சியாக வாழ்ந்தவர்கள் எல்லாம் இன்று கண்ணீர் கதைகளோடும், நினைவுகளோடும் வாழ்கின்றார்கள். கடந்துவிட்ட அவர்களது வாழ்வு மீண்டும் கிடைக்காதா என்ற ஆதங்கத்தோடு வாழு(டு)ம் அவர்கள் பற்றி நூலாசிரியர் செ. ஞானராசா அவர்கள் தனது நலன்புரி நிலையம் என்ற பாடலில் இவ்வாறு கூறியிருக்கின்றார்.

நலன்புரி நிலைய மாணவர்கள்
நலம் பல இழந்து போனவர்கள்
பலன் பெற உதவி செய்திடவே
பாசமாய் எழுந்து வாருங்கள்

வன்னியில் இருந்த போதினிலே
வாய்ப்பு வசதிகள் அவர்க்குண்டு
அன்னியப்பட்டுப் போனதினால்
அடிப்படை உரிமை இழந்தாரே

தனது பாடல்களால் சின்னஞ் சிறார்களை கவரும் வல்லமை ஆசிரியருக்கு இருக்கிறது. நூலுருவாக்கத்தில் நன்கு திட்டமிட்டு பயனுள்ள விடயங்களை சேர்திருக்கும் நூலாசிரியருக்கு எமது வாழ்த்துக்கள்!!!

பெயர் - பாவைப் பிள்ளை (சிறுவர் பாடல்;)
நூலாசிரியர் - செ. ஞானராசா
முகவரி - 993, Anbuvalipuram, Trincomalee, Sri Lanka.
தொலைபேசி - 026 3267891, 077 5956789
வெளியீடு - சர்வீனா வெளியீட்டகம்
விலை - 200 ரூபாய்

குற்றமும் தண்டனையும் - சிறுகதைத் தொகுதி

குற்றமும் தண்டனையும் சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

பல வருடங்களாக ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கும் எம்.பி.எம். நிஸ்வான் அவர்கள் சிறந்த சிறுகதை எழுத்தாளராவார். மூன்றாம் தலாக் என்ற அவரது முதல் சிறுகதைத் தொகுதி பல மட்டங்களிலும் பேசப்பட்டதொரு நூலாகும். அதைத் தொடர்ந்து குற்றமும் தண்டனையும் என்ற தொகுதியை அவர் வெளியிட்டிருக்கிறார். இந்தத் தொகுதி 108 பக்கங்களில் ரஹ்மத் பதிப்பகத்தின் வெளியீடாக மலர்ந்திருக்கிறது.

தலையங்கங்களுக்கு ஏற்ற விதமாக சிறப்பான படங்களை வழங்கியிருக்கிறார் கலைவாதி கலீல் அவர்கள்.

சிந்திக்கத் தக்கவை. இன்று எழுதப்படும் பல விடயங்களில் அர்த்தங்கள் என்று எதுவுமிருக்காது. அப்படியின்றி சமூகம் சார்ந்த, உணர்வு பூர்வமான விடயங்களை முன்வைக்கும்போது சிறுகதைகள் வழிகாட்டிகளாகவும் மாறிவிடுகின்றன. இது பற்றி நூலாசரியர் நிஸ்வான் அவர்கள் தனது உரையில் கூறியிருக்கும் வாசகங்கள்.


`கதைகள் மக்கள் பிரச்சினையை யதார்த்தபூர்வமாக சித்தரிக்கும் கலைத்துவ சிருஷ்டிகளாக அமையும் பட்சத்தில் அவை மக்கள் கலையாக மாறுகின்றன. சமூகப் பார்வையற்ற மனிதப் பிரச்சினைகளை அணுகாத கதைகள் யதார்த்தமானதல்ல'.

வெளிநாட்டுக்குச் சென்று உழைத்தல் என்பது இன்று நேற்று நடக்கும் விடயமல்ல. பல வருடங்களாக தொடரும் இந்த பழக்கத்தால் பலர் நன்மை அடைந்திருக்கிறார்கள். பலர் பாதிக்கப்ட்டிருக்கிறார்கள். இத்தொகுதியின் முதல் கதையாக வருகின்ற குற்றமும் தண்டனையும் என்ற கதையும் மேற்சொன்ன பிரச்சினையை இயம்பி நிற்கின்றது.

குடும்பத் தலைவன் தனது மனைவி பிள்ளைகளுக்காக உழைக்கவென்று வெளிநாடு செல்கிறான். வருடங்கள் ஐந்து கடந்த நிலையில் சந்தோஷமாக வீடு திரும்புகிறான். வந்து ஓரிரண்டு தினங்கள் கடந்த நிலையில் மனைவி அவனின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கிறாள். அதற்கான காரணத்தை அறிந்தவனுக்கு தலையே சுற்றுகிறது.

அதாவது ஷமனைவிக்கு வேறொருவனுடன் தொடர்பு இருந்திருக்கிறது|  என்பதை மனைவி மூலமே அறிகின்றான். இதைப்பற்றி ஒரு பெரியவிரடம் ஆலோசனை கேட்கும்போதுதான் தனது பிழையை உணருகிறான் குடும்பத் தலைவன்.

மனைவியை தனிமையில் விட்டுச் சென்றால் சிலவேளைகளில் இவ்வாறான பாதிப்புக்கள் நிகழலாம். அதைப் பற்றின விழிப்புணர்வுக் கதையாகவே இது எழுதப்பட்டுள்ளது.

கல்வி ஒருவனுக்கு எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் ஒழுக்கம் என்பதாகும். ஒழுக்கமற்ற கல்வியால் எந்தப் பலனும் கிடையாது. பாடசாலை மாணவர்கள் இன்று மிகவும் துர்நடத்தை உள்ளவர்களாக மாறி வருவதை அவதானிக்கலாம்.

பாதைகளில் போகும்போது வரிசையாக செல்லாமல் கத்திக்கொண்டும், பாதையில் வருவோர் போவோரை பகிடி பண்ணியவாறும் செல்கின்றார்கள். பெண் பிள்ளைகளைக் கண்டால் போதும் ஏதேதோ கூறி தங்களுக்குள் சிரித்துக்கொள்வார்கள். ஆசிரியர்களை மதிப்பதில்லை. இவ்வாறான விடயங்களை வைத்து எழுதப்பட்டிருக்கும் கதையே ஒழுக்கம் இல்லாத கல்வி என்பதாகும்.

காலம் எவ்வளவுதான் முன்னேறினாலும் வரதட்சணை என்ற சம்பிரதாயம் மாறுவதாக இல்லை. இன்றைய இளைஞர்கள் இது சம்பந்தமாக சிந்திக்க வேண்டும். மஹர் கொடுத்து மணமுடிக்க வேண்டியவர்கள் சீதனத்தை பெறுவது என்பது எவ்வளவு வெட்கக்கேடான செயல் என்பதை சிந்திக்க வேண்டும். நிலைகெட்ட மனிதர்கள் என்ற கதையில் வரும் பிரச்சினையும் மேற்சொன்னதுதான்.

மாமியர் வீட்டுக்குப் போன பெண்ணை மாமியாரும் மதினியும் வார்த்தைளால் கொல்லுகிறார்கள். அந்த ஊரில் ஏதாவது ஒரு திருமணம் நடந்தால் அந்த வீட்டவர்கள் வீடு கொடுத்தார்கள், நகை கொடுத்தார்கள். நீ என்ன கொண்டு வந்தாய் என்றெல்லாம் குத்தலாகப் பேசுவார்கள். கணவனிடம் சொன்னால் உண்மையைத்தானே சொல்கிறார்கள் என்று கணவன் சொல்கிறார். இப்படியிருக்க அந்தப் பேதை தீக்காயங்களுக்கு இரையாகி இறந்து போகிறாள். இது தற்கொலையா, கொலையா என்று யாருக்கும் தெரியவில்லை. பணத்துக்காக என்னென்னமோ நடக்கிறது. இப்படியும் நடக்கிறது என்றவாறு நிறைவுறுகிறது இந்தக் கதை.

அந்த ஒரு நிமிடம் என்ற கதை குடும்பப் பகையையும், காதலையும் உள்ளடக்கியது. சொந்த அண்ணன் தங்கச்சியின் பிள்ளைகளான மச்சானும், மச்சாளும் காதலிக்கிறார்கள். ஆனால் சொத்துப் பிரச்சினையால் குடும்பங்களிரண்டும் ஜென்மப் பகை. ஆதலால் இருவரும் ஊரைவிட்டு ஓட திட்டம் தீட்டுகின்றனர். இந்த விடயம் ஊரிலுள்ள பெரியவர்களுக்கு எட்டுகின்றது. இவ்hறானதொரு இழிகாரியம் நடந்தால் அது சமூகத்துக்கும் பாதிப்பு. குறிப்பிட்ட இரண்டு குடும்பங்களுக்கும் பாதிப்பு. ஆதலால் இரு வீட்டாருடன் கலந்து பேசுவதாகக் கூறி சமாதானப்படுத்துகின்றனர் ஊர் பெரியோர்கள்.

கண்டிஷன் மாப்பிள்ளை என்ற கதை சிரிக்கவும் வைக்கிறது. சிந்திக்கவும் வைக்கிறது. பல லட்சங்கள், நகை, வீடு, மாப்பிள்ளையின் பக்கத்திலிருந்து வருவோர் அனைவருக்கும் சாப்பாடு யாவற்றையும் பெண்ணின் வீட்டார் செய்ய வேண்டும் என்பதும், திருமணம் பெரிய பணக்கார ஹோலில் நடைபெற வேண்டும் என்பதும் மாப்பிள்ளை வீட்டாரின் கண்டிஷன்.

எல்லா கண்டிஷனுக்கும் பெண் வீட்டார் ஒத்துக்கொள்கின்றனர். காரணம் மாப்பிள்ளை வெளிநாட்டில் வேலை. மாப்பிள்ளையின் தகப்பனும் பெரிய தனவந்தர். ஊரில் நடக்கும் எல்லா காரியங்களுக்கும் முதல் ஆளாக அழைக்கப்படும் செல்வாக்கு கொண்டவர். ஆதலால் எப்படியேனும் அவரின் மகனை தமது மருமகனாக்கிக்கொள்ள பிரயத்தனப்படுகின்றனர்.

திருமண நாளன்று மாப்பிள்ளை வர தாமதமாகிறது. பெண் தரப்பிலிருந்து மாப்பிள்ளையை அழைத்து வரப் பேகின்றார்கள். போன இடத்தில்தான் தெரிகிறது அவர்கள் யாரும் திருமணத்துக்கு வரமாட்டார்கள் என்று. காரணம் ஷஇரண்டாம் இலக்க மண்டபம் மாப்பிள்ளைக்கு போதவில்லையாம். முதல் மண்டபத்தில் கல்யாணம் நடைபெறாதது மாப்பிள்ளைக்கு செய்த அவமரியாதையாம்|.

இவ்வாறான பல சமூக விடயங்களை தனது கதைகளில் உள்ளடக்கி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நூலாசிரியருக்கு எமது வாழ்த்துக்கள். அவரிடமிருந்து இன்னும் பல படைப்புகளை எதிர்பார்க்கிறோம்!!!

நூல் - குற்றமும் தண்டனையும் (சிறுகதை)
நூலாசிரியர் - எம்.பி.எம். நிஸ்வான்
முகவரி - ரஹ்மத், 6 ஏ, யோனக மாவத்தை, வத்தல்பொல, கெசெல்வத்தை, பாணந்துறை.
தொலைபேசி - 0382297309
வெளியீடு - ரஹ்மத் பதிப்பகம்
விலை -  200 ரூபாய்