Wednesday, June 20, 2012

பூஞ்சிறகுகள் - சிறுவர் பாடல்

பூஞ்சிறகுகள் சிறுவர் பாடல் மீதான இரசனைக் குறிப்பு

புரவலர் புத்தகப் பூங்காவின் வெளியீடாக மேக வாழ்வு எனும் கவிதைத் தொகுதியையும், நோன்பு என்ற பெயரில் சிறுவர் கதை நூலொன்றையும் தந்த வெளிமடை ரபீக் அவர்கள் தனது அடுத்த தொகுதியை சிறுவர் பாடல்களாக வெளிக் கொணர்ந்திருக்கிறார். 22 பக்கங்களை உள்ளடக்கிய பூஞ்சிறுகுகள் என்ற இந்த நூல் வர்ணப் படங்களையும் ஏந்தி அழகாக காட்சியளிக்கின்றது. சிறுவர்களின் மனதைக் கவரும்படியான அழகிய பாடல்களும், படங்களும் இதில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றமை புத்தகத்தின் சிறப்பம்சமாகும்.

வெள்ளாப்பு வெளியின் வெளியீடாக மலர்ந்திருக்கும் இந்நூல் பற்றி குழந்தைகள் போலவே குழந்தை இலக்கிய வடிவங்களும் வடிவழகு மிளிர்பவை. எளிமையும், எழிலும் பூப்பவை. குழைவு மொழியாய் குதூகலிப்பவை. தேனோசையில் சுரந்து வழிபவை. பூஞ்சிறகுகளாய் புளகாங்கிப்பவை என்கிறது வெள்ளாப்பு வெளி வெளியீட்டகம்.


ஈழக்கவி நவாஸ் ஏ. ஹமீட் அவர்கள் நூலின் சிறப்பம்சம் பற்றி இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார். சிறுவர் இலக்கியங்களைப் படைப்போர் குழந்தைக்கல்வி, குழந்தை உளவியல், குழந்தைகளுக்குரிய கற்பித்தலியல், சிறுவர் அழகியல், சிறுர்களுக்கான மொழி, ஓசை, பாடுபொருள் முதலிய பல்வேறு துறைகளிலும் அறிவு மிக்கவர்களாயிருத்தல் இத்தகைய உயிர் துடிப்புமிக்க பாடல்களை எழுதியிருக்கிறார்.

திரு. ரபீக் அவர்கள் ஆரம்பப் பிரவுக்கான ஆசிரியப் பயிற்சியையும் பட்டப்பின் படிப்பின் மூலமாக உளவியலையும் அறியப் பெறறிருப்பவர் ஆரம்ப, உயர்தர வகுப்புக்களுக்கு கற்பித்த ஆசிரியர் ரபீக் அவர்கள் தற்போது வெளிமடை வலயக் கல்விக் காரியாலயத்தில் ஆசிரிய ஆலோசகராக கடமையாற்றுகிறார்,

அம்மா என்ற முதல் பாடலானது அகர வரிசைப்படி எழுதப்பட்டிருக்கின்றது. தாயினதும், இரண்டு பிள்ளைகளினதும் வர்ணப்படமும் இக்கவிதைக்காக சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கின்றது. அதன் சில வரிகள் இதோ..

அம்மா எங்கள் அம்மா
ஆசையான அம்மா
இனிமையான அம்மா
ஈகை வழங்கும் அம்மா

உணவு சமைக்கும் அம்மா
ஊஞ்சல் ஆட்டும் அம்மா
எனக்கு விருப்பம் அம்மா
ஏற்றம் காட்டும் அம்மா...

தங்கை என்ற பாடல் இனிமையாகவும், ஓசை நயம் மிக்கதாகவும் காணப்படுகின்றது. நிலவைப் பற்றியும் பாடலினூடாக கூறும் கவிஞர் சிறுவர்கள் விரும்பும் பாடலாக இதை புனைந்திருக்கிறார் என்றால் மிகையில்லை.

தங்க நிலவு வானிலே
தவழும் அழகைக் காணவே
தங்கை வந்து நிற்கிறாள் - கையைத்
தட்டித் தட்டிச் சிரிக்கிறாள்!

அங்கும் இங்கும் பார்க்கிறாள் - அந்த
அழகிய நிலவைக் கேட்கிறாள்
மங்கல் வானைப் பார்க்கிறாள் - நிலவு
மறைவதெப்படி? கேட்கிறாள்..

துயில் கொண்டிருக்கும் தன் குட்டித் தம்பியை ஒரு சிறுமி பள்ளிக்கூடம் போவதற்காக எழுப்புகிறாள். அந்த விடயத்தை பாடல் மூலம் தந்திருக்கிறார் கவிஞர். சிறுவன் கட்டிலில் தூங்குவது போன்றும், அவனருகே ஒரு சிறுமியும், கடிகாரமும் சித்திரத்தில் காணப்படுகின்றன. தம்பியை எழுப்பும் அந்தக் காட்சி சித்திரமாக்கப்பட்டிருக்கின்றமை சிறுவர்களை கவர்ந்துகொள்ளும்.

சோம்பல் நீயும் கொள்ளாதே
சோர்ந்து நீயும் தூங்காதே
வீம்பு நீயும் கொள்ளாதே
விரைவாய் தம்பி எழுந்திடுவாய்

பள்ளி செல்ல வேண்டுமே
பாடம் படிக்க வேண்டுமே
துள்ளி நீயும் எழுந்திடுவாய்
தூக்கம் வேண்டாம் எழுந்திடுவாய்!

முத்துப் பற்கள் என்ற தலைப்பில் சிறிய பாடல் ஒன்று எழுதப்பட்டிருக்கிறது. எட்டு வரிகளைக் கொண்ட இந்தப் பாடல் பற்களை பாதுக்காக்க வேண்டும் என்ற தொனியில் எழுதப்பட்டுள்ளது.

கண்ட கண்ட பொருளை பல்லால்
கடிக்கும் பழக்கம் தவிர்திடுவோம்
உண்ட பின்னே உறங்கும் முன்னே
ஒழுங்காய் பல்லைத் துலக்கிடுவோம்

வெட்டும் பற்கள் வேட்டைப் பற்கள்
வேண்டும் நமக்கு நாளுமே
முத்துப் பற்கள் நன்றாய் காத்து
மகிழ்ச்சி காண்போம் வாழ்விலே!

மாலைக்காட்சி, அணில் குஞ்சு, மரம் நடுவோம், பச்சைக்கிளி என்ற தலைப்புக்களிலும் அழகிய கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. சிறுவர்களின் வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இவ்வாறான பல நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் வெளிமடை ரபீக் அவர்களின் பூஞ்சிறகுகுள் என்ற நூலும் தனக்கான தனியிடத்தைப் பெற்று நிற்கின்றது.

குழந்தைகளுக்கு எது நல்லது என்பதை பெற்றோரும், வளர்ந்தவர்களும் நன்கறிவார்கள். இன்றைய இளஞ் சமூகம தனது ஓய்வு நேரங்களை தொழில்நுட்ப வளர்ச்சிக் கருவிகளுடன் கழிக்கின்றது. ஆனால் அதன் பாரதூரங்களை அவர்கள் அறியமாட்டார்கள். நாம்தான் சிறுவர்களுக்கு உகந்தவற்றை கற்றுக்கொடுக்க வேண்டும். அந்த வகையில் நூல்கள் அறிவுக்குத் தீனியாகவும், நல்ல விடங்களைக் கற்றுக்கொடுக்கும் ஆசானாகவும் திகழ்கின்றன. எனவே பெற்றோர்களே உங்கள் பிள்ளைகள் எதிர்காலத்தில் சிறந்தவர்களாக மிளிர வேண்டுமானால் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை கற்றக்கொடுங்கள். நூலாசரியருக்கு எமது வாழ்த்துக்கள்!!

நூலின் பெயர் - பூஞ்சிறகுகள் (சிறுவர் பாடல்)
நூலாசிரியர் - வெளிமடை ரபீக்
தொலைபேசி - 077 9790053
வெளியீடு - வெள்ளாப்பு வெளி
விலை - 150 ரூபாய்

சின்னச் சிட்டுக் குருவி - சிறுவர் பாடல்

சின்னச் சிட்டுக் குருவி சிறுவர் பாடல் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

சின்னச் சிட்டுக் குருவி என்ற சிறுவர் பாடல் தொகுதியினூடாக இலக்கிய உலகத்துக்கு அறிமுகமாகிறார் திருமதி. சுகிலா ஞானராசா அவர்கள். இவர் எழுத்தாளர் திருகோணமலை செ. ஞானராசா அவர்களின் துணைவியார் என்பது குறிப்பிடத்தக்ககது.

தி/செல்வநாயகபுரம் இந்து மகா வித்தியாலயத்தில் பிரதி அதிபராக கடமையாற்றும் இவரிடம் இயல்பாகவே சிறார்களுக்கு பாடல் புனையும் திறமை இருந்திருப்பதை இந்த நூல் கட்டியம் கூறுகிறது.

சர்வீனா வெளியீட்டகத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் 41 பக்கங்களில் அமைந்த இத்தொகுதி, கல்வி அமைச்சின் இலங்கை தேசிய நூல் அபிவிருத்தி சபையினால் அங்கீகரிக்கப்பட்டிருப்பதுடன் 17 பாடல்களையும், அவற்றுக்கேற்ற வர்ணப் படங்களையும் அழகாக தன்னகததே கொண்டிருக்கிறது.




சிட்டுக் குருவியே என்ற பாடல் ஓசை நயம் மிக்கதாகவும், ரசிக்கத்தக்கதாகவும் எழுதப்பட்டிருக்கின்றது.

பஞ்சு மெத்தை மேனி
பார்த்தெடுப்பாய் தீனி
அஞ்சு விரல் தொட்டுக்கொள்ள
ஆசைப்படும் தேன் நீ!

மொட்டு விடும் மலரில்
மொய்த்து வரும்போது
கிட்ட நான் வரவும்
கிளம்பி ஏன் பறப்பாய்?

வாசித்தல் மனிதனை பூரணமாக்கும். நூலகம் வாசிப்பிற்கான பொதுத்தளம். இன்றைய சமுதாயத்தில் வாசிக்கும் ஆர்வம் வெகுவாக குறைந்துள்ளது. பாடசாலைகளிலும் நூலகங்கள் முறையாக பயன்படுத்தப்படுவதில்லை. மாணவர்கள் தவிர ஆசிரியர்களும் வாசிப்பையும், அதனால் ஏற்படும் நன்மைகளையும் அறிய வேண்டும். அதற்காக நூலகம் என்று தலைப்பிட்ட கீழுள்ள பாடல் பேருதவியாய் அமைகிறது. அதன் அடிகள் இவ்வாறு

நூலகம் நாம் சென்று
நூல் பல கற்று
பாலகப் பருவம் இதை
பயனுளதாக்குவோம்

இரண்டடி எனும் குறள்
இதனுடன் நாலடியார்
தர மெனும் பெருங் காப்பியம்
தகும் எனக் கண்டவை

இயற்கை என்ற பாடல் ரம்மியமாக மனதை வருடுகிறது. அதற்காக இணைக்கப்பட்டுள்ள படமும் மனதில் பதிந்துவிடுகிறது. வானம், கடல், காடு, நிலம் எல்லாமே இயற்கை அழகுக்காக உவமிக்கப்படுபவை. நூலாசிரியரின் வரிகள் இவ்வாறு விரிகிறது..

இயற்கை தந்த செல்வம்
இறைவன் தந்த இன்பம்
வியக்கும்படி இருக்கும்
விதத்தை அறிய இனிக்கும்

மயக்கம் மாலைப் பொழுதில்
மஞ்சல் வெயில் போட்டு
தயக்கம் இல்லாதிருக்க
தக தக வென ஒளிரும்

காலை எழுந்தவுடன் படிப்பு.. பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு.. மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா.. என்று கூறியிருக்கிறார் பாரதி. படிப்பைப் போல விளையாட்டுக்கும் நேரம் ஒதுக்கும் அவசியத்தை இந்த வரிகள் சுட்டி நிற்கின்றன. திருமதி சுகிலாவும் விளையாடுவோம் என்ற மகுடத்தில் பாடலை பின்வருமாறு இயற்றியிருக்கிறார்.

குந்தி இருந்து நொந்து
குழம்பி போனோம் என்றால்
எந்தப் பயனும் இல்லை
எமக்கு ஏற்றது அல்ல

ஓடி ஆடி விளையாட
ஓடும் குருதி சீராகும்
கூடி மகிழக் குறையும்
குழப்பமான மன நிலையும்

கணிதப் பாடத்தைப் போல் இலேசான பாடமில்லை என்றும், அதைப்போல கஷ்டமான பாடம் இல்லை என்றும் பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். எது எப்படியிருப்பினும் தொடர் பயிற்சிகளை மேற்கொண்டால் கணிதம் சுலபமாக அமையும். ஆனால் பலர் அப்படியின்றி ஷகாப்பியடித்து| விடுகின்றனர். நூலாசிரியரின் நயக்கத்தக்கதாக எழுதியிருக்கும் விதம் இவ்வாறு அமைகிறது.

சாட்டுக்காக பார்த்துச் செய்து
சரி வாங்கிக் கொண்டால்
வீட்டு வேலை தந்தபோது
விரைவில் மாட்டிக்கொள்வீர்

நாளும் பயிற்சி செய்து வர
நன்கு கணக்கு அறிவு
நீளும் இதனை உணர்ந்து
நீரும் பயிற்றி எடுப்பீர்

தனது முதல் தொகுதி என்றாலும் மிக அழகியதாகவும், பாடத்திட்டத்துக்கு பொருந்தியதாகவும் பாடல்களை எழுதியிருக்கிறார் திருமதி சுகிலா அவர்கள். சிறுவர்கள் மாத்திரமின்றி புத்தகத்தை படிப்பவர்களும் பாடல்களால் கவரப்படுவார்கள். இன்னும் பல நூல்களைத் தர வேண்டும் என நூலாசிரியரை வாழ்த்துகிறேன்!!!

பெயர் - சின்னச் சிட்டுக் குருவி (சிறுவர் கவிதைகள்)
நூலாசிரியர் - சுகிலா ஞானராசா
முகவரி - 993, அன்புவழிபுரம், திருகோணமலை.
வெளியீடு - சர்வீனா வெளியீட்டகம்
விலை - 200/=